Thursday, 24 December 2009

இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகில் இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் இறந்துள்ளார்.

மேரக் (இந்தோனேசியா): இந்தோனேசியாவின் மேரக் துறைமுகத்தில் கடந்த பல வாரங்களாக நங்கூரமிட்டிருக்கும் கப்பலில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் தகுந்த சிகிச்சையின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த துயரச் சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்தான் காரணம் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையிலிருந்து மலேசியா வழியாக சிறிய கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 200க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தற்போது இந்தோனேசியாவில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

தங்களுக்கு அரசியல் புகலிடம் வழங்கப்படாத வரை கப்பலை விட்டு இறங்க முடியாது என்று அவர்கள் கூறி தொடர்ந்து கப்பலிலேயே பல வாரங்களாக தங்கியுள்ளனர்.

மேரக் துறைமுகத்தில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கப்பலில் இருந்த 29 வயதான ஜேக்கப் கிறிஸ்டியன் என்ற தமிழ் வாலிபருக்கு உடல் நலம் குன்றியது.

அவரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யுமாறு கப்பலில் இருந்து தமிழர்கள், இந்தோனேசிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் உதவி வரவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஜேக்கப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் தகவலை ஆஸ்திரேலியாவின் சோசலிச கட்சி அதிகாரிகளுக்கு தமிழர்கள் போன் செய்து தெரிவித்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் குறித்து கப்பலில் உள்ள குமார் என்பவர் கூறுகையில், ஜேக்கப் கிறிஸ்டியன் மிகவும் மோசமான முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்து வந்தார்.

அவரை மருத்துவமனையில் சேர்க்குமாறு நாங்கள் கோரியும் இந்தோனேசிய அதிகாரிகள் மறுத்து விட்டனர். மேலும் கப்பலுக்கும் மருத்துவர்களை அனுப்ப மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்த மிக மிக ஆபத்தான கட்டத்தில்தான் உதவி வந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் நிச்சயம் ஜேக்கப் கிறிஸ்டியன் பிழைத்திருப்பார் என்றார்.

சோசலிச கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அந்தோணி மெய்ன் இச்சம்பவம் குறித்துக் கூறுகையில், இந்த துயரத்திற்கு ஒரே ஒருவரைத்தான் குறை கூற முடியும். அவர் கெவின் ரூட்.

இவர்தான் இந்தோனேசிய அரசைத் தொடர்பு கொண்டு இந்தக் கப்பலை தடுத்து கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டவர். இவர்தான் இந்த மக்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் கெடுத்தவர். ஓசியானிக் வைகிங் கப்பலில் உள்ளவர்களுக்குக் கிடைத்தது போன்ற அகதிகள் அந்தஸ்து இவர்களுக்கும் கிடைக்காமல் செய்தவர்.

தனது பொறுப்பை செய்யாமல், ஒருவர் பின் ஒருவராக சாகச் செய்து வருகிறார் கெவின் ரூட். இந்த மக்கள் உடனடியாக ஆஸ்திரேலியா வருவதற்கு கெவின் ரூட் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த அப்பாவி மக்கள் உயிர் பிழைக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment